மத்திய அரசின் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா அணிவகுப்பிற்காக தென் மண்டலத்தின் சார்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல் தொழில் நுட்ப கல்லூரிகளை சேர்ந்த 40 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவில் அன்னை பாத்திமா கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயிலும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவி சிந்துபைரவி என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டு சென்னையிலிருந்து மற்ற குழுவினருடன் விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லியில் 20 நாட்கள் நடக்கும் சிறப்புப் பயிற்சியில் கலந்து கொண்ட பிறகு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள உள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பேரில் இவரும் ஒருவர் என்பதும் நாட்டு நலப்பணித் திட்ட பல்வேறு சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவியை கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலாஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், தமிழ் துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் முனியாண்டி, பேராசிரியர்கள் பால்ராஜ், ஆர்.கார்த்திகா, எஸ்.கார்த்திகா, சீனிவாசன், இராமுத்தாய், ஜோதி, இன்பமேரி, ஆறுமுக ஜோதி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இம் மாணவியை குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வு செய்து, பயண ஏற்பாட்டிற்கு உதவி செய்த மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையைச் சேர்ந்த மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய்ராம், மாநில நாட்டு நல பணி திட்ட அலுவலர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக் கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டி ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் நன்றி தெரிவித்தார்.