நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா

Madurai Minutes
0

மதுரை விமான நிலையம் அருகில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் சென்னை மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பங்கேற்றுப் பேசியபோது கல்லூரிகளில் இருந்து வெளியேறும் புதிய பட்டதாரிகள் எப்போதும் 'வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாக' இருக்க வேண்டும், ஏனெனில் இவை மாறிவரும் காலத்திற்கு மிகவும் அவசியமான தேவை என தெரிவித்தார்.


மேலும் அவர் பேசியதாவது: “பட்டமளிப்பு தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மைல்கல். இன்று, நீங்கள் சிறப்பாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உங்களை அன்றாடம் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலை இருக்கிறது.  அதற்காக மீண்டும் மீண்டும் பல்வேறு தேடல்களையும் அறிவார்ந்த விஷயங்களையும் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். படிப்பை முடித்த பிறகு   வேலை கிடைத்து அதில் சேர்ந்த பிறகும் வாழ்நாள் முழுவதும் கற்பவராக இருங்கள், கற்றுக்கொண்டே இருங்கள், எப்போதும் ஒரு லட்சியம் உங்களிடம் இருக்கட்டும். அதற்கான முறையான பயிற்சிகளை இந்த கல்லூரி உங்களுக்கு எப்போதும் வழங்கும் என நான் எண்ணுகிறேன்.


இப்போதெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இல்லை, ஏனெனில் அவர்கள் பாலினத்தில் மட்டுமே வேறுபடுகிறார்கள் . பொதுவாக “ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் அல்ல.  வெள்ளைக்கு எதிரானது கருப்பு அல்ல. அவை இரண்டும் வெவ்வேறு நிறங்கள் மட்டுமே. அதேபோல், ஆண்களும் பெண்களும் இரு பாலினங்கள் அவ்வளவு தான்.அதன் அடிப்படையில் இன்று பல்வேறு நிலைகளில் ஆண்களும் பெண்களும்  சம அளவில் உயர்ந்து வருகின்றனர்.


கற்றலின் போது மட்டுமல்ல பொதுவாகவே நம் சிந்தனை மற்றும் சிந்தித்தல் முறைகளை அவ்வப்போது காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கல்லூரி மாணவப் பருவம் என்பது வாழ்வில் ஒரு முக்கியமான காலமாகும். வெறும் பட்டப்படிப்போடு உங்களை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு லட்சியங்களை வகுத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தல் வேண்டும். குறிக்கோளோடும் லட்சியத்தோடும் உங்களது முயற்சிகள் தொடர்ந்தால் நிச்சயம் பல உயரங்களை உங்களால் எட்ட முடியும்.  குறிப்பாக கிராமப்புறமாக இல்லாமலும் நகர்ப்புறமாக இல்லாமலும் நகருக்கு வெளியே  ஒரு பொதுவான இடத்தில் கற்றல் சூழலுக்கான முக்கிய அடிப்படை வசதிகளைக் கொண்டு இந்த கல்லூரியை உங்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பினை நீங்கள் எல்லோரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


இன்று பட்டம் பெறும் மாணவ மாணவியர்களின் தேர்ச்சிக்கு அவரவர் பெற்றோர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது இந்த கல்லூரியின் உழைப்பும் நல்ல பயிற்சியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அத்துடன்  நல்ல வேலை வாய்ப்புள்ள படிப்புகளை தேர்வு செய்து மாணவ மாணவியருக்கு கற்றலை வழங்கி வரும் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லூரியையும் அதன் செயலாளரையும்  பாராட்டுகிறேன் என்றார். இவ்விழாவில் பல்வேறு படங்களில் தேர்ச்சி பெற்ற 475 மாணவ மாணவியர்களுக்கு  பட்டங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார் நீதியரசர்.


சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கே.முத்துச்செழியன் தனது வாழ்த்துரையில், வளர்ச்சி இலக்குகளை அடைய காலத்துக்கு ஏற்றவாறு பல்துறைக் கல்வியின் முக்கியத்துவம் அவசியம் என்றார். 


“இந்திய உயர்கல்வி முறை சமீப காலங்களில் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ரூசா போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை  மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் இதில் பல சவால்களும் உள்ளன. இந்த கல்லூரி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், அது நல்ல வளர்ச்சியையும் கற்றுத் தருவதில் முதிர்ச்சியையும் பெற்றுள்ளது. 


கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான டாக்டர்.என்.ஜெகதீசன் தனது வரவேற்பு உரையில் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இக்கல்லூரியில் கிராமப்புறம் மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு நல்ல கல்வி அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிப்பதோடு அவர்கள் சுய ஒழுக்கம் உடையவர்களாகத் திகழ வேண்டும் என்பதில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்கிறோம். பொதுவாக பட்டப்படிப்புகளை தவிர அதிக அ வில் வேலைவாய்ப்புகள்  அளிக்கக்கூடிய வகையில் மதுரையில் மற்ற கல்லூரிகளில் இல்லாத கூடுதல் பாடத்திட்டங்களை உருவாக்கி அவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் அவர்களை தயார் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எங்களது கல்லூரியின் தனிச்சிறப்பாகும். கல்லூரி துவங்கிய 6 ஆண்டுகளுக்குள் கல்விப் பணியில் வியத்தகு சாதனைகளைப் படைக்க உதவியாக இருந்த கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


2022-23ஆம் கல்வியாண்டுக்கான கல்லூரிஆண்டறிக்கையை முதல்வர் டாக்டர்.கே.அர்ஜுனன் சமர்பித்தார். கல்லூரியில் 19 இளங்கலைப் படிப்புகள் மற்றும் இரண்டு முதுநிலைப் படிப்புகள் உள்ளன என்றார்.


இவ்விழாவில் நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் டாக்டர்.எஸ்.நாகரத்தினம், அறங்காவலர்கள் என்.ராஜேந்திரன், என்.கார்த்திகேயன் கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டம் பெற்ற மாணவ, மாணவியரின்  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !