தமிழ்நாடு மாநில டேக்வாண்டோ அசோசியேசன் செயலாளர் செல்வமணி துணை செயலாளர் ஜோதிபாசு ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்க தலைவர் மூசா மாறன், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் அனைத்து பள்ளி மாணவ- மாணவியருக்கான டேக்வாண்டோ தரம் பட்டை தேர்வு முகாம் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் முகாமை துவக்கி வைத்து உரையாற்றுகையில் கொரியா நாட்டில் துவங்கப்பட்ட டேக்வாண்டோ தற்காப்பு கலையானது உடல் மற்றும் மன வலிமைக்கு பயிற்சி அளிக்கக்கூடியது எனவும், மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, மரியாதை போன்றவற்றை கற்பிக்கிறது எனவும் இப்பயிற்சி அனைத்து வயதினருக்கும் ஏற்றது எனவும் குறிப்பிட்டார்.
இம்முகாமில் ஏழுமலை பாரதியார் பள்ளி, அவனியாபுரம் ஏ.எஸ்.என். பள்ளி, கருப்பாயூரணி அப்பர் பள்ளி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மதுரை மாவட்ட டேக்வாண்டோ பயிற்சியாளர் ரவீந்தர் மற்றும் சங்க இணைச் செயலாளரும், அன்னை பாத்திமா கல்லூரி உடற்கல்வி இயக்குனருமான நாராயண பிரபு ஆகியோர் செய்தனர்.