மதுரையில் முதல்முறையாக டிஜிட்டல் அரசியல் கருத்தரங்கு நடந்தது. டிஜிட்டாமேட்டிக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கை தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் தலைவர் எஸ்.ரத்தினவேலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி., பேராசிரியர் இராம சீனிவாசன், காங்கிரஸ் கட்சி ஐடி விங் அலிம் அல்புகாரி, பாஜக ஐடி விங் மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத், நாம் தமிழர் கட்சி ஐடி விங் மாநில இணைச் செயலாளர் ஆர்.பி.சந்தோஷ் உள்பட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கருத்தங்கில், இளம் தலைமுறை இந்த 2024 தேர்தலை எப்படி பார்க்கிறது? இந்த தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்யப்போவது எது? தேர்தலில் டிஜிட்டல் பிரச்சாரத்தின் பங்கு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கு குறித்து டிஜிட்டாமேட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே.கே.முத்து கூறுகையில், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அரசியலுக்கும் அத்தியாவசியம் ஆகி விட்டது. தொழில்நுட்பத்தை எவ்வாறு அரசியலுக்கு பயன்படுத்துவது? அதன் பயன்கள் என்ன? என்பது குறித்து இந்த கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றது கூடுதல் சிறப்பம்சமாகும். பேஸ்புக், யூ டியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், சாஃட்வேர் மற்றும் டிஜிட்டல் சர்வீஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்கும். தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவும், வருவாய் ஈட்டவும் ஒரு வாய்ப்பாக இந்த கருத்தரங்கு இருக்கும், என்றார்.