மதுரை
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தைரியமாக வெளிக்கொண்டு வர வேண்டும் என காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் எஸ்.பி.சிவபிரசாத் பேசினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் கல்வி மையம் சார்பில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்கள் கல்வி மைய இயக்குநர் ராதிகாதேவி வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் முன்னிலை வகித்து பேசும் போது
ஊரடங்கிற்கு பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 27 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை நம்மிடம் ஏற்படுத்தும் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பேசுகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் என்பது உலகளாவிய பிரச்சினை. பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முதலில் வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறு வெளியே கொண்டு வருவதால் காவல்துறை உள்ளிட்டவற்றின் மூலம் உங்களுக்கு பாதுகாப்பும் தீர்வும் ஏற்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. பெண்கள் தைரியமாக உங்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொண்டு வர வேண்டும். காவல்துறை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கல்ந்து கொண்டனர்.