சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு கலாசாரம் இன்றியமையாதது என்பது உலகளாவிய உண்மை. காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழும், காசியும் கலாசார ரீதியாக ஒன்றிணைந்துள்ள நிலையில், இரண்டுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான நேர்மறை முயற்சிகளும் ஏற்பட்டு உள்ளன. ஜவுளித்துறையில் தமிழகத்தின் பணியை நாடே பாராட்டி வருகிறது.தமிழ்நாட்டிலேயே கோவையில் தான் அதிக பருத்தி ஆலைகள் உள்ளன. கோவை, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதற்கு, அதன் பருத்தி உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில்களே காரணமாகும். உள்ளாடைகள், பின்னலாடைகள், சாதாரண உடைகள் மற்றும் விளையாட்டு உடைகள் ஆகியவற்றில் முன்னணி ஆதாரமாக திருப்பூரும் உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. 3 தசாப்தங்களாக, திருப்பூர் நாட்டின் பின்னலாடை தலைநகராக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தின் பிரபல தொழிலதிபரும், தியாகராஜன் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனருமான ஹரி தங்கராஜன் கூறுகையில், “ஜவுளித்துறையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறந்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை ஜவுளி. வாரணாசியில் இருந்து பலரிடம் பேசியுள்ளோம். இரு இடங்களுக்கு இடையே உள்நாட்டு வர்த்தகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறோம். இது காசி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு பகுதிகளுக்கும் பயனளிக்கும்” என்றார்.ஜவுளி, பம்புகள், வெட் கிரைண்டர்கள், முக்கிய உதிரிபாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக தமிழகம் மாறும் என்றும், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார். மேலும், “துணி முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு வரை, முடிக்கப்பட்ட தயாரிப்பு முதல் ஃபேஷன் தயாரிப்பு வரை மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகள் வரை, இந்த முழு மதிப்புச்சங்கிலியில் இந்தியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. கோவை மக்களின் தொழில் முனைவோர் திறமையைப் போற்றுகிறேன்” என்றும் கூறினார்.