தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ஈஷா கிராமோத்வம் திருவிழாவின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரையில் நேற்று (செப்.10) கோலாகலமாக நடைபெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சர்வதேச கபடி வீரர் கர்ணன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் என்னும் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்கட்டமாக, கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் மதுரையில் எம்.ஜி.ஆர் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தேர்வான வாலிபால் மற்றும் கபடி வீரர்கள் பங்கேற்றனர்.
விறு விறுப்பாக சென்ற வாலிபால் போட்டியின் இறுதிப் போட்டியில் மதுரையை சேர்ந்த கள்ளந்திரி அணி சத்திரப்பட்டி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. ராமநாதபுரத்தை சேர்ந்த ஏர்வாடி மற்றும் வேதலை அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்தன.
இதேபோல், ஆண்களுக்கான கபடி போட்டியில் புதுக்கோட்டை அணி முதலிடம் பிடித்தது. திண்டுக்கல், சிவகங்கை, மதுரை அணிகள் முறையே 2-வது, 3-வது, 4-வது இடங்களை கைப்பற்றின. மேலும், பெண்களுக்கான கபடி போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடமும், தேனி அணி 2-வது இடமும் பிடித்தது. சிவகங்கை மற்றும் மதுரை அணிகள் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்தன.
சர்வதேச கபடி வீரரும் யுவா கபடி குழுவின் பயிற்சியாளருமான திரு. கர்ணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. விஜயகாந்த், உதவி காவல் ஆய்வாளர் திரு. ராமசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.
மண்டல அளவில் தேர்வாகியுள்ள அணிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதில் கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும், வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.