மதுரை நுரையீரல் மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மருத்துவ மாநாடு மதுரை மேரியாட் ஹோட்டலில் 29 அக்டோபர் 2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமி அவர்கள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ஏ. ரத்தினவேல் அவர்கள் தலைமையேற்றனர்.
துணைவேந்தர் பேசும்போது நுரையீரல் மருத்துவத் துறையின் வளர்ச்சி பற்றியும், மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். டீன் டாக்டர் ஏ. ரத்தினவேல் பேசும்போது கொரோனா நோய் தொற்று காலத்தில் நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள் வழங்கிய பங்களிப்பு பற்றியும், நுரையீரல் மருத்துவ சிகிச்சை அடைய வேண்டிய வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்தார். மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டிற்கான ஏற்பாட்டை நுரையீரல் மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் M.பழனியப்பன் மற்றும் செயலாளர் டாக்டர் R.பிரபாகரன் மற்றும் பொருளாளர் டாக்டர்.S.C.விவேகானந்தன் ஏற்பாடு செய்திருந்தனர். இம்மாநாட்டில் நுரையீரல் மருத்துவ சிகிச்சைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் நுரையீரல் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றும் விவாதிக்கப்பட்டது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்திருந்த மருத்துவ பேச்சாளர்கள் நுரையீரல் மருத்துவத் துறையில் உள்ள சிக்கலான மருத்துவ சிகிச்சை முறைகளை பற்றி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தனர்.