ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதியின் பேரில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் விழிப்புணர்வு கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசு ஊழியர்களாக மாறும் வாய்ப்புள்ள மாணவ-மாணவியர்கள் லஞ்சம் வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்ற உறுதி ஏற்று நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும் எனக் கூறினார்.
மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் காவல் ஆய்வாளர்கள் ஆம்புரோஸ் ஜெயராஜ் மற்றும் சூர்யகலா ஆகியோர் கலந்துகொண்டு லஞ்சம் பெறுவதால் அரசின் திட்டங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்ட சில லஞ்ச வழக்கு விபரங்களை எடுத்துரைத்து மாணவ- மாணவர்களிடையே விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.
முன்னதாக வணிக மேலாண்மை துறை உதவிப் பேராசிரியர் திருப்பதி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தடய அறிவியல் துறை தலைவர் சீனிவாசன் தலைமையில் மாணவ-மாணவியர்கள் அஸ்வின், கார்த்திகேயன், ஜெனிடா, ஷோபனா, ராபியா, தாருன்னிஸா, ஸ்ரீ ஜெயலட்சுமி ஆகியோரும் அரங்க ஏற்பாடுகளை மனித வள மேனேஜர் முகமது ஃபாசிலும் செய்தனர்.