அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய இளைஞர் பெருவிழா

Madurai Minutes
0

ஆண்டுதோறும் ஜனவரி 12ஆம் தேதி  சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவை இளைஞர் பெருவிழா கொண்டாட்டம் என்ற பெயரில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. 


இக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் இருந்து திறமையான நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கு பல்கலைக்கழகம் வாரியாக முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளின் நாட்டு நலப்படுத்திட்ட மாணவ மாணவியர்களின் முகாம் திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.  


இம்முகாமை மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் மாணவ-மாணவியர்கள் தங்களுடைய எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் தற்போது மிக எளிதாக கிடைக்கிறது எனவும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவ-மாணவியர் தங்களது திறமைகளையும், கற்பனை திறனையும் வளர்த்துக் கொண்டு தங்களுக்கு பிடித்தமான துறையில் முயற்சிகள் மேற்கொண்டு சாதனை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


இம்முகாமில் கலந்து கொண்ட அன்னை பாத்திமா கல்லூரியின் தாளாளர் எம். எஸ். ஷா புதிய தேசிய  கல்விக் கொள்கை மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மாணவர்கள் நலனிலும் தேசத்தின் நலனிலும்  மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றுகிறார் எனவும், மாணவ மாணவிகள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுடைய எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என  அறிவுரை கூறினார்.


மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் செந்தில் குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி ஆகியோர்  தேசிய இளைஞர் பெருவிழா கொண்டாட்டத்தின் நோக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.


கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வழங்கிய வாழ்த்துறையில் நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்களின் தனித் திறமைகளை செழுமையாக்க பல தளங்களை உருவாக்குகிறது எனவும் இவற்றை பயன்படுத்தி தனி திறமைகளை வளர்த்துக்கொண்டு போட்டி மிகுந்த இவ்வுலகில் தங்களுக்குரிய இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். 


முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி வரவேற்புரையாற்றினார். 

துவக்க நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து வந்திருந்த நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவியர்களின் கரகாட்டம், குழு நடனம், தனி நடனம், நாட்டுப்புற நடனம், கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் சிறப்பான திறமைகளை  வெளிக்காட்டிய மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டு, சென்னை நேரு விளையாட்டரங்கில்  மாநில அளவில் நடைபெற உள்ள இளைஞர்  பெருவிழாவில் கலந்து கொள்ள தகுதியான மாணவ மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  நிகழ்ச்சியை பேராசிரியர்கள் ராஜ்குமார் கார்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினர். 


இம் முகாமில் என்.எம். ஆர் . சுப்புராமன் மகளிர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மன்னர் கல்லூரி, செந்தமிழ் கல்லூரி, அன்னை பாத்திமா கல்லூரி, சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லூரி, அருளானந்தர் கல்லூரி உள்ளிட்ட 25 கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் 40 நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனியாண்டி, ராமுத்தாய், ஜோதி, உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு மற்றும் சிஸ்டம் இன்ஜினியர் உதய கதிரவன் மனிதவள மேனேஜர் முகமது பாசில் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சி இறுதியில் செந்தமிழ் கல்லூரி பேராசிரியர் பூங்கோதை நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !