புதுதில்லி
ரயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 2022-23ம் நிதியாண்டில் இதுவரை, 1973 கிலோ மீட்டர் தூரத்திலான 2647 கிலோ மீட்டர் ரயில் தண்டவாளங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டை காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும். 1161 கிலோ மீட்டர் இரட்டை வழிப்பாதைகளும், 296 கிலோ மீட்டர் கிளை வழிப்பாதைகளும், இந்த நிதியாண்டில் இதுவரை மின்மயமாக்கப்பட்டுள்ளன.
ரயில் வழித்தட மின்மயமாக்கலில் 2022-23ம் நிதியாண்டில் இதுவரை எட்டப்பட்ட சாதனைகள் சில:
நாட்டின் மொத்த ரயில் தண்டவாளப் பாதைகளில் தற்போது வரை 83 சதவீதம் வரை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மத்திய ரயில்வேக்கு உட்பட பகுதிகளில் 100 சதவீதம் மின்மயமாக்க சாதனை எட்டப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இந்தாண்டு ரயில்வே மின்மயமாக்கலில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்:
திருச்சி- மானாமதுரை- விருதுநகர் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு விரைந்தப் போக்குவரத்துக்கு வகை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்- பழனி வழித்தடம் மின்மயமாக்கப்பட்டதன் மூலம், திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. உலக புகழ்பெற்ற வழிப்பாட்டு மையமாகத் திகழும் பழனி மற்றும் அப்பகுதியில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் விரைந்து செல்ல இந்த மின்மயமாக்கல் நடவடிக்கை உதவிகரமாக அமைந்துள்ளது.
காரைக்குடி- மானாமதுரை வழித்தடத்தைப் பொருத்தவரை திருச்சி - காரைக்குடி- மானாமதுரை - விருதுநகர் ரயில் தண்டவாளப் பாதைகள் முழுமையாக மின் மயமாக்கப்பட்டுள்ளதால், பயணிகள் இப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு எளிதில் செல்ல முடிகிறது. மானாமதுரை ஒரு வணிக மையமாக உள்ள நிலையில், இந்த மின்மயமாக்கல் நடவடிக்கை, சரக்குப் போக்குவரத்து மூலமான வருவாய்க்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.
தேசத்தின் பெட்ரோலிய இறக்குமதியை குறைத்து எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுச்சூழலுக்கேற்ப விரைவான மற்றும் எரிசக்தி சிக்கனத்துடன் கூடிய போக்குவரத்தை வழங்க ரயில்வே தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அகல ரயில்பாதைகளை 100 சதவீதம் மின்மயமாக்கும் நடவடிக்கைகளை நோக்கி ரயில்வே விரைந்து நடைபோடுகிறது.