மதுரை எல்.கே.பி. நகர் நடுநிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை மனோன்மணி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக எல்கேபி நகர் மாணவர் மாணவியர் தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய மண்டலம் என அறிவிக்கப்பட்ட அரிட்டாப்பட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அரிட்டாபட்டி கிராமத்தின் சார்பாக சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் மற்றும் அவர்கள் குழுவினர் வருகை புரிந்து அக்கிராமத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், நீர் ஊற்றுகள், சுனைகள், பறவைகள், விலங்குகள், மரங்கள், மலைகள், குன்றுகள் முதலியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
எல் கே பி நகர் பள்ளியின் சிலம்பம் குழுவினர் சிலம்பம் சுழற்றி அரிட்டாபட்டி மண்ணிற்கு மரியாதை செலுத்தினார்.
எல் கே பி நகர் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்பட்டன. மேலும் அப்பகுதியில் இருந்த நெகிழி பைகள் மற்றும் குப்பைகள் தூய்மைப்படுத்தும் நோக்கில் பள்ளியின் சார்பாக சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் கூறுகையில்,
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய மண்டலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி ஒரு தொன்மையான இடமாகும். இங்கு உள்ள மலைகள், குன்றுகள், ஏரிகள், சுனைகள், பறவைகள், மரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது மிக மிக முக்கியமானதாகும். இக்கிராமத்தினை அனைத்து பள்ளி குழந்தைகளும் வந்து பார்வையிட்டு தங்களது சுற்றுச்சூழல் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் தொன்மையான இடங்களை பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்ளலாம். இத்தகைய இடங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் அளிக்கின்றன,
என்றார்.
பள்ளியின் சார்பாக அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய மண்டலமாக அறிவித்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உணவு உபசரிப்பு சமூக ஆர்வலர் துரை அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் சமூக ஆர்வலர்கள் அசோக்குமார், முராபாரதி மற்றும் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், தொன்மை பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இன்டெக் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் குகன் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். தொன்மை மன்ற
மாணவ ஒருங்கிணைப்பாளர் போதும் பொண்ணு நன்றி கூறினார்.