மதுரை,
தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கும் ஒரு Auto Immune நோயான ஆட்டோ இம்யூன் GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி கண்டறியப்பட்ட 31 வயதான ஒரு பெண்மணிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்தியாவில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இன்டராவீனஸ் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் சீராய்டு மருந்துகளை கொண்டு 10 நாட்கள் வழங்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து இந்த பெண் நோயாளி அவரது பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் பெற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். T.C. விஜய் ஆனந்த் கூறியதாவது:
“GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற Auto Immune நோய், உடல் மற்றும் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிவிரைவான மாற்றங்களை விளைவிக்கக்கூடும். இந்நோய் பாதிப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உறுதி செய்வது தான் சவாலான விஷயம். மூளையை மூடியிருக்கின்ற திசுக்களின் தொற்று பாதிப்பு நிலைகளான meningitis, மூளைக்காய்ச்சல், மூளையின் அழற்சி நிலைகள் அல்லது மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய இரண்டிலும் காணப்படும் அழற்சி பாதிப்பான மூளை தண்டுவட அழற்சி போன்ற மாறுபட்ட நோய் பாதிப்பு நிலைகளை நோயாளிகள் கொண்டிருக்கக்கூடும். வழக்கமான மைக்ரோபயாலஜிக்கல் (நுண்ணுயிர்) சோதனைகளுக்கும் கூடுதலாக, இந்த அரிதான நோய் நிலைக்கான சான்றை கண்டறிவதற்கு தனிச்சிறப்பான பரிசோதனைகள் தேவைப்படுகின்றன எனவே துல்லியமான காரணத்தை கண்டறிந்து உறுதி செய்வதற்கு முன்னதாகவே நோயாளிகளுக்கு பட்டறிவு / அனுபவம் சார்ந்த சிகிச்சை வழங்கப்படுகிறது; மைய நரம்பு மண்டலத்தின் பாதிப்பு நிலைகள் இன்னும் மோசமாகாமல் தடுப்பதற்காக அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சிகிச்சையே இது. வழக்கமாக இன்டராவீனஸ் வழியாக செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளுக்கு GFAP ஆஸ்ட்ரோபதி நோயானது குணமடைதலுக்கான பதில் வினையாற்றும் என்றார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் மருத்துவர் S. நரேந்திரன் இந்நோயாளிக்கு செய்யப்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விளக்கும்போது, “இந்த பெண் நோயாளிக்கு காய்ச்சல், தலைவலி பிரச்சனைகள் இருந்தன. சிறுநீர் பை நிரம்பிய உணர்வு இருந்தபோதிலும் கூட, சிறுநீர் கழிப்பது சிரமமானதாக இவருக்கு இருந்தது. உடலின் இரு பக்கங்களிலும் கீழ்ப்புற உறுப்புகளில் (இடுப்பிற்கு கீழே) பலவீனமும் மற்றும் அவரது உணர்திறன் கண்ணோட்டங்கள் மாற்றமடைய தொடங்கிய நிலையில் எமது மருத்துவமனைக்கு இப்பெண்மணி அழைத்து வரப்பட்டார். கழுத்தில் விரைப்புத்தன்மையும், மார்பிற்கு கீழே உணர்திறன் இழப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். அனுபவத்தின் அடிப்படையில் சிரை வழியாக செலுத்தப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டு தொடக்கத்தில் இவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம்.” என்று கூறினார்.அவர் மேலும் பேசுகையில்: “அதன்பிறகு Auto Immune நோயான GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி உட்பட தொற்றுக்கான சான்றை கண்டறிவதற்கு பல்வேறு சிறப்பு பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டோம். பிற தொற்றுகள் மற்றும் அழற்சி பாதிப்பு நிலைகள் இல்லை என்று உறுதி செய்து விலக்குவதற்காக AFS, TB-PCR, மான்டெக்ஸ் மற்றும் பிற சோதனைகளை நாங்கள் இவருக்கு செய்தோம். இப்பெண்ணின் மூளை மீது செய்யப்பட்ட PET-CT பரிசோதனை, உரிய நேரத்திற்குள் துல்லியமான நோயறிதல் முடிவை எட்டுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இறுதியாக, முதுகுத்தண்டு மற்றும் மூளை காயத்திலிருந்து பாதுகாக்கின்ற ஒரு தெளிவான திரவமான செர்பிரோ ஸ்பைனல் ஃபுளூயிட் என்பதில் செய்யப்பட்ட GFAP-இம்யுனோகுளோபுளின் G (IgG) பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிகிச்சைகளை சீராக்கி வழங்கினோம். 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு முன்பிருந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டதாலும், அப்பாதிப்பு நிலை திரும்ப வருவதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாததாலும் நலமுடன் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.” என்று குறிப்பிட்டார்.பேட்டியின் போது மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் உடனிருந்தார்