மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் கலைத்திருவிழா நடைபெற்றது. முதல்வர் காட்வின் ரூபஸ் தலைமை வகித்தார். கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம், செயலர் கில்பர்ட் கமிலஸ், இணை முதல்வர் சுந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், நடிகையும் எழுத்தாளருமான ரோகிணி, யூடியூப் தமிழன்டா சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கலை விழாவில் ஐயப்பன் எம்.எல்.ஏ.பேசியதாவது
1970ம் ஆண்டு தொடங்கப்பட்ட அருள் ஆனந்தர் கல்லூரியால் இப்பகுதி அதிகம் கல்வி அறிவு பெற்ற பகுதியாக மாறத்தொடங்கியது.
மாணவ, மாணவிகள் கல்வி அறிவு பெற்றதால் பெண் சிசுக்கொலை குழந்தை திருமணம் போன்றவை குறையத் தொடங்கியது. இன்றைய கால கட்டத்தில் செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றார். தாமஸ் ஆல்வா எடிசன் அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்து மாணவர்களை உற்சாகமூட்டினார். மேலும் கல்லூரியில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி மாணவர்கள் வாழ்க்கை தரம் உயர கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். கல்லூரி மாணவர்களிடம் கேள்வி கேட்டு சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.சிறப்பாக படிக்கும் மாணவர் கையில் புத்தகம் இடம்பெறும். சாதனை மாணவர்கள் புத்தகத்தில் இடம்பெறுவர்.ஆகவே மாணவர்கள் புத்தகத்தில் இடம்பெற முயற்சிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளை கேட்டுக்கொண்டார்.
முடிவில் கல்லூரி மாணவர் புல தலைவர் நிர்மல் ராஜ்குமார் நன்றி கூறினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.