மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மேலூர் தாலுகாவில் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த பகுதியை மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் அறிவித்த பசுமை தமிழகம் திட்டத்தின்படி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வைத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் மரக்கன்றுகள் வாங்கி அவற்றை அரிட்டாபட்டி பகுதி இளைஞர்களிடம் வழங்கி மலையடிவார இடங்களில் நடவு செய்யும் வகையில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் சுற்றுச்சூழல் மீது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்துவோம் என்றார்.
மேலும் இப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஹரிபாபு, இயற்கை ஆர்வலர்கள் செந்தில்குமார், அசோக்குமார், ரமேஷ்குமார், சதீஷ்குமார், பெரியதுரை உள்ளிட்ட கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.