ஆண்டிபட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் ஒரு சமுதாயத்தினர் பெண்களை சாட்டையால் அடித்து வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் மகா சிவராத்திரி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் ஒரு சமுதாயத்தினர் அன்னை மகாலட்சுமி கோவிலில் மகா சிவராத்திரி விழாவை .அப்போது கோயில் வளாகத்தில் பெண்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் பூசாரியால் சவுக்கடி கொடுக்கப்பட்டது. இது குறித்து பூசாரி வேல்முருகன் என்பவரிடம் கேட்டபோது,
இது பரம்பரை பரம்பரையாக ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் சம்பவம் ஆகும். அன்னை மகாலட்சுமியிடம் வரம் கேட்டு பில்லி ,ஏவல், சூனியம் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு சாட்டையடி வழங்கி அவர்களிடமிருந்த கெட்ட சக்தி வெளியேற்றப்படும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை வரம் வேண்டுவோர், திருமணம் முடிக்க முடியாமல் தவிப்போர் இங்கு வேண்டிக் கொண்டால், அவர்களுக்கும் சாட்டையடி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அவருடைய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாட்டையடி பெற்றனர். முன்னதாக கோவிலில் இருந்து பூசாரி உள்பட பக்தர்கள் ஊர்வலமாக சென்று ,விநாயகர் கோவிலில் வழிபட்டு ,அங்கிருந்து பூசாரி ஆணி செருப்பு அணிந்து ஊர்வலமாக வந்து கோயிலை அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவருக்கும் நவதாணிய அவியல் பிரசாதமாக வழங்கப்பட்டது.