மதுரை,
வெயிலும் புழுதியும் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த வெக்கை பூமியின் வாழ்வை அதன் வலியை எதார்த்தம் மங்காமல் ஒரு நாவல் எழுத நினைத்த பயணத்தின் இந்த நாளில் "சைக்கிள்" புத்தகமாக மலர்ந்திருக்கிறது. செக்கானூரணியை மையமாகக் கொண்ட சுத்துப்பட்டு கிராம மக்களின் வாழ்வியல் சிக்கலைப் புரிந்துகொண்டு அதை சரிசெய்யும் முயற்சியில் நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த நாவல் வெளியீட்டு விழா செக்கானூரணியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முனைவர் புவனேஸ்வர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து கலந்து கொண்டு சைக்கிள் நூலின் முதல் பிரதியை வெளியிட அதை மதிப்புமிகு பூவாயி அம்மாள் பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் ஷாஜஹான், முனைவர் சுந்தரவல்லி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.திரைப்பட இயக்குநர் பாடலாசிரியர் ஏகாதசி ஏற்புரை வழங்கினார்.
கவிஞர் பொற்கை பாண்டியன், த.மு.எ.க.ச. மாநில துணை பொதுச் செயலாளர் வெண்புறா, துணைச்செயலாளர் ஸ்ரீரசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் பிரேமலதா நன்றி கூறினார். நாடகக் கலைஞர் சிவமணி நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆ.கொக்குளம் கிராம கமிட்டி தலைவர் கொடி.சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் சிவபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.