மத்திய அரசுத் துறைகளில் பணிநியமன ஆணைகள் வழங்கும் வேலைவாய்ப்பு விழா அஞ்சல் துறை சார்பில் இன்று (16.05.2023) சென்னையில் நடைபெற்றது.
ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டுமென்ற அரசின் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் 45 இடங்களில் 71,000-க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று வழங்கினார். காணொலிக் காட்சி மூலம் பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களிடையே அவர் உரையாற்றினார்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அஞ்சல் துறை, ரயில்வே அமைச்சகம். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 247 பேருக்கு அவர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அரசின் ஓர் அங்கமாக மாறுவது குறித்த தங்களின் எண்ணங்களையும், அந்தந்த துறைகளில் தங்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், தங்கள் எதிர்பார்ப்புகளையும் நியமனதாரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் திருமதி ஜே சாருகேசி, அஞ்சல் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் திருமதி பி.பி.ஸ்ரீதேவி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் திரு ஜி.நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் திரு கே.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நடைபெற்ற விழாவில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 238 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி டி.நிர்மலா தேவி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் திரு மணிஷ் அகர்வால், வருமானவரித்துறை முதன்மை ஆணையர் திரு பி.பி.சேகரன், சுங்கத்துறை ஆணையர் திரு டி.அனில், ஜி.எஸ்.டி ஆணையர் திரு பி.ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் நடைபெற்ற பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மத்திய சுற்றுலா, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, மற்றும் நீர் வழிப் பாதைகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் பங்கேற்று 200 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
இவ்விழாவில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த், தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் வி.எஸ்.ஜெய்சங்கர், தென் மண்டல அஞ்சல்துறை இயக்குநர் சரவணன், மதுரை ரயில்வே கோட்டப் பணியாளர் நல அலுவலர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் நடைபெற்ற விழாவில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜான் பிர்லா 371 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.