பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய விழா மிக எழுச்சியோடு நடைபெற்றது

Madurai Minutes
0

                                                                        

தூத்துக்குடி மாவட்டம்   

 சரித்திர நாயகன் வீரர் குல திலகம் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சத்தாரால் வழிபடப்பட்டு வரும்  பாஞ்சாலங்குறிச்சி  வீரசக்க தேவி ஆலய 67 ஆவது உற்சவத் திருவிழா வழக்கம் போல இந்த வருடம் சித்திரை மாத கடைசி வெள்ளியன்று தொடங்கியது. மே 12, 13  ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் விடுதலைக் களம் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் கலந்துகொண்டார்.

தமிழகம் எங்கும் இருந்தும் உறவுச் சொந்தங்களும் உணர்வுச் சொந்தங்களும் திரண்ட இந்த விழா வீரசக்கதேவியின் புகழ் இன்னும் நூற்றாண்டுகள் நீடிக்கும் என்ற பெருமித உணர்வையே ஏற்படுத்தியது. 

 பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தார். 

இவ்விழாவிற்கு நான்கு சக்கர வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது ஒரு நபர் மட்டுமே ஜோதியுடன் நடந்துவர அனுமதிக்கப்படுவர். மற்ற இளைஞர்கள் நடந்து வரும்போது கம்பு, அருவாள், கத்தி, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்கள் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது. மீறும்பட்சத்தில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்படும்.

  இவ்விழாவிற்கு திருச்செந்தூரிலிருந்து மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை சார்பாக எடுத்துவரப்படும் ஜோதியுடன் ஒரு வாள் மட்டும் எடுத்துவர அனுமதிக்கப்படுகிறது” என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது காவல்துறை. 

 விழா கமிட்டியாளர்கள் காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். விழாவிற்கு வரும் நபர்கள் எக்காரணம் கொண்டும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது. விழாவின்போது ஜோதி கொண்டுவருவது, வாகனங்களை நிறுத்துவது, வழித்தடங்கள் போன்ற நிகழ்வுகளை காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.  விழாவிற்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் உரிய பேரூந்து வசதிகளை விழா கமிட்டியினர் அமைத்து கொடுக்க முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்...  ஜோதி எடுத்து வருபவர்கள் காவல்துறையினர் சொல்லும் வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வாகனங்கள் மீது ஏறிக்கொண்டோ கோஷங்கள் போட்டுக் கொண்டோ செல்லக்கூடாது என்றெல்லாம் காவல்துறையினரின் நிபந்தனைகள் நீண்டுகொண்டே சென்றன. . “கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலய விழாக்களை எவ்வித அசம்பாவிதமின்றி விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அனைத்து ஒத்துழைப்பையும் பொதுமக்கள் தரவேண்டும் என்றும், மேற்படி விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையால் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலை மற்றும் நியாயமான தேவைகளுக்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்.


காவல்துறை விதித்த நிபந்தனைகள் எல்லாம் கடைபிடிக்கப்பட்டு மிகவும் அமைதியாக விழா நடந்தேறியிருக்கிறது.  144 உத்தரவு இந்த ஆண்டு விதிக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்த நிலையில் முதல் நாள் 144 தடை உத்தரவும் விதித்தனர். 

இந்த நிலையில் மே 12 ஆம் தேதி காலை   திடீரென  வீரசக்கம்மா தேவி கோயில் விழா ரத்து செய்யப்படுகிறது என்று தவறான தகவல் சில தொலைக்காட்சிகளில் பரவியது. ஆனால் இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது அப்படியெல்லாம் இல்லை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறோமே தவிர விழாவை நிறுத்தவில்லை என்று விளக்கம் கொடுத்தனர்.

மே 12 ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி மாலையில் லட்சக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கினர். கண்களில் கட்டபொம்மனையும் நெஞ்சில் சக்கம்மா தேவியையும் ஏந்திக் கொண்டே பாஞ்சாலங்குறிச்சி நோக்கி பட்டாளம் திரண்டது. அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அவற்றை அதேவித கடுமையோடு நடைமுறைப்பத்தாமல் எதார்த்ததை உணர்ந்து சில தளர்வுகளை அனுமதித்ததைப் பாராட்டலாம்.

மே 12 ஆம் தேதி மாலையே பாஞ்சாலங்குறிச்சி வீர சக்க தேவி ஆலயத்துக்கு விடுதலைக்  களம் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தனது கட்சி நிர்வாகிகளோடு சென்று அடைந்தார்.  நிறுவனத் தலைவர் நாகராஜனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்த கட்சியினர் வரவேற்றனர்.  

இரவு 9. 45 மணிக்க மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரான அன்புச் சகோதரர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆலயத்துக்கு வந்தனர். அவர்களை விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் நாகராஜன் வரவேற்றார். அப்போது  நிறுவனத் தலைவரைப் பார்த்த துரை வைகோ,  ‘விடுதலைக் களம்  நாகராஜன்...  நல்லா இருக்கீங்களா?’ என்றார் புன்னகை பூத்தபடியே.  நிறுவனத் தலைவரின் குடும்பத்தினர் நலத்தையும் விசாரித்தார்.


வழிபாட்டை முடித்துவிட்டு வந்த துரை வைகோ அங்கே இசை நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடையில் ஏறி... கட்டபொம்மன், ஊமை துரை, வீரன் சுந்தரலிங்கம், வெள்ளைய தேவன், தானாதிபதி பிள்ளை ஆகியோரின் தியாகத்தைப் போற்றி சமூக ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். திரளாகத் திரண்ட இளைஞர்கள் அதை உள்வாங்கி எதிரொலித்தனர்.  

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நமது வீரசெறிந்த வீரபாண்டிய  கட்டபொம்மன் வம்சா வழியினருக்கு செய்த சாதனைகளை குறிப்பிட்டுப் பேசினார் துரை வைகோ. 

தமிழகம் முழுதும் இருந்து விடுதலைக்  களம் கட்சியினரின் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஒருசேர  பார்க்கும், உரையாடும் வாய்ப்பு இந்த வீரசக்க  தேவி கோயில் திருவிழாவால் நமக்கு அருளப்பட்டது. 


விடுதலைக் களம் கட்சியை சேராத நமது சொந்தங்களும் கூட நமது கட்சியின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருந்து நிறுவனத் தலைவர் நாகராஜனை அணுகிப் பாராட்டினார்கள்.   நாகராஜன் அவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு அதை தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும் உடனடியாக பொருத்தியிருந்தார்கள். 

அதுமட்டுமல்ல...தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நிறுவனத் தலைவர் நாகராஜன் அவர்களை அணுகி தத்தமது பகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளையும் புகார்களாக தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உடைக்குளம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்   சிலை  நிறுவப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியும் அதைத் திறக்க முடியாத நிலை நிலவுவதாக அப்பகுதி  மக்கள் தெரிவித்தனர். அதேபோல  திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் பகுதியிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு இதே நிலைமைதான் என்று அங்கிருந்து வந்த மக்களும்  விடுதலைக் களம் நிறுவனத் தலைவரிடம் முறையிட்டனர். உரிய அதிகாரிகளிடம் பேசி அரசியல் ரீதியான அழுத்தமும் தந்து தமிழகத்தில் திறக்கப்படாமல் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகளை திறப்போம் என்று அவர்களிடம் உறுதியளித்தார் நிறுவனத் தலைவர்.

இவ்வாறு வீர சக்கதேவி கோயில் திருவிழா உணர்வெழுச்சியோடு விழிப்புணர்ச்சி பெறும் விழாவாகவும் அமைந்தது. விடுதலைக் களம் கட்சி தமிழ்நாட்டில் குக்கிராமங்களுக்குக் கூட சென்று சேர்ந்திருக்கிறது என்ற நற்செய்தியை விழாவில் பங்கேற்றோர் நிறுவனத் தலைவரிடம் உரையாடியதை வைத்தே அறிய முடிந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலயக் குழு மிக சிறப்பாக செய்திருந்தது. சிலர் நாக்கினைத் தொங்கப் போட்டுக் கொண்டு எதிர்பார்த்ததைப் போல  எந்த அசம்பாவிதத்துக்கும் இடம் கொடுக்காமல் மனித நேயத்தோடும் இணக்கத்தோடும் நடந்திருக்கிறது விழா. உணர்வு நிறைந்ததைப் போல திரண்டு வந்த லட்சக்கணக்கான சொந்தங்களுக்கு உணவு ஏற்பாடுகளையும் நிறைவாக செய்திருந்தனர். 



இந்த விழாவில்  விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் நாகராஜனோடு    விருதுநகர் விடுதலைக் களம் மாவட்டச் செயலாளர் அருண் குமார், நாமக்கல் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி,  சந்துரு, விடுதலைக் களம் தலைமை அலுவலகச் செயலாளர் ரமேஷ், கரூர் மாவட்ட் இளைஞரணிச் செயலாளர் ரவிக்குமார், நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் சென்றாயன், ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வீரசக்க தேவியின் அருளோடு விடுதலைக் களம் கட்சியின் வீரியத்தையும் இந்த விழாவில் உணர முடிந்தது. இதே உணர்வோடு தொடர்ந்து களமாடுவோம். இன்னும் பலமாகுவோம்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !