மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (MMHRC) புற்றுநோய்க்காக சிகிச்சையளிக்கப்பட்டு புற்றுநோயை வென்ற சாம்பியன்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்வை சமீபத்தில் நடத்தியது.
புற்றுநோயை ஜெயித்து வெற்றிகரமாக உயிர்வாழும் சுமார் 75 நபர்கள் அவர்களது குடும்பத்தினரோடு இந்நிகழ்வில் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். புற்றுநோயை வெல்வதற்கான தங்களது யுத்தத்தில் எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்களை எப்படி அவர்கள் சமாளித்து வெற்றி கண்டனர் என்று சித்தரிக்கும் தங்களது வாழ்க்கை கதைகளை இந்நிகழ்வில் பேசிய சாதனையாளர்கள் பகிர்ந்து கொண்டனர். தாங்கள் எதிர்கொண்ட அதே சூழ்நிலையை தற்போது எதிர்கொள்ளும் எண்ணற்ற புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கவும், உத்வேகமும், தைரியமும் வழங்கவும் தங்களது வாழ்க்கைக் கதையை இந்நிகழ்வின் வழியாக பகிர்ந்து கொள்வது தங்களது உண்மையிலே திருப்தியளிக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
“மீனாட்சி நம்பிக்கை நிதியம்” (“The Meenakshi HOPE fund”) என்பதனை MMHRC -ன் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் இந்நிகழ்வின்போது தொடங்கி வைத்தார். புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறும்போது, நிதிசார்ந்த சிரமங்களை கொண்டிருக்கும் நபர்களுக்கு உதவுவதே, இதன் நோக்கம். HOPE (நம்பிக்கை) புற்றுநோய் நிதிய அமைப்பிற்கு தாராள மனதுள்ளவர்களின் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்ற நிலையில் இம்மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்தினம், முதல் நன்கொடை தொகையாக ரூ. 1 இலட்சத்தை வழங்கியிருக்கிறார். MMHRC – ன் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் அவர்களிடம் இத்தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.”
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த புற்றுநோய் சாம்பியன்களை MMHRC -ன் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் வரவேற்று உரையாற்றினார். “சிகிச்சையின் வழியாக புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்வாழும் ஒவ்வொரு நபரிடமும் சொல்வதற்கு ஒரு தனித்துவமான கதை இருக்கிறது. சிலருக்கு சிறு வயதிலேயே நோயறிதல் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர்களது நோய் பாதிப்பு பற்றி அதிக நினைவுகள் இருப்பதில்லை. புற்றுநோயிலிருந்து சிகிச்சையின் மூலம் விடுபட்டு, உயிர்பிழைத்தவர்களுள் சிலர், அவர்களது டீன்ஏஜ் வயதில் அல்லது இருபது வயதுகள் காலகட்டத்தில் இருக்கின்றனர். புற்றுநோயின் காரணமாக அவர்களது வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழும் ஒவ்வொரு நபரின் அனுபவமும் தனித்துவமானது என்றாலும் கூட, இவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. இவர்கள் அனைவருமே புற்றுநோயை சிகிச்சையாலும், தங்களது மனஉறுதியாலும் வென்ற சாம்பியன்கள். இவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்களை புரிந்துகொள்வது இதேபோன்ற சூழ்நிலைகளை தற்போது கையாண்டு வருகின்ற பிற புற்றுநோயாளிகளுக்கு மிகவும் உதவக்கூடியதாக இருக்கும். புற்றுநோய்க்கு எதிரான இந்த யுத்தத்தில் வெற்றிகாண அவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் மற்றும் ஆதரவையும் இவை வழங்கும் என்பது நிச்சயம்.” என்று கூறினார்.
MMHRC – ன் மருத்துவ புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்தினம் இந்நிகழ்வின்போது கூறியதாவது: “புற்றுநோய்க்கு சிறப்பான மற்றும் விரிவான சிகிச்சையளிக்கும் சில சிகிச்சை மையங்களுள் ஒன்றாக MMHRC செயலாற்றி வருகிறது. கீமோதெரபி, இம்யூனோ தெரபி எனப்படும் நோயெதிர்ப்புத்திறன் சிகிச்சை மற்றும் இலக்கு நோக்கிய சிகிச்சை ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பங்களையும், நெறிமுறைகளையும் பயன்படுத்தி இந்நாட்டில் பிராந்திய அளவிலான முதன்மை சிகிச்சை மையங்களுக்கு நிகரான சிகிச்சையை அர்ப்பணிப்போடும், நோயாளிகள் மீதான அக்கறையோடும் MMHRC வழங்கி வருகிறது. 2014-ம் ஆண்டிலேயே எலும்புமஜ்ஜை மாற்று சிகிச்சை திட்டத்தை தென்தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த முதல் மையம் என்ற பெருமை இம்மருத்துவமனைக்கு உரியது. குறைந்த கட்டணத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு சிகிச்சையின் மூலம் குணமளித்திருக்கின்ற பெருமிதத்தை இம்மையம் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவசியமின்றி, “டே கேர்” என்ற வழிமுறையில் புற்றுநோய்க்கான பெரும்பாலான சிகிச்சை செயல்முறைகள் வழங்கப்படுவதால், நோயாளிகளுக்கான செலவு இங்கு குறைவாக இருக்கிறது.”
MMHRC – ன் மருத்துவ புற்றுநோயியல் துறையின் தலைவரும், முதுநிலை சிறப்பு நிபுணருமான டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்தினம், இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். MMHRC – ன் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். இதன் மருத்துவ இயக்குனரும், இரையக குடலியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி, மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். B. கண்ணன், அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவர் & முதுநிலை நிபுணர் டாக்டர். விஜய பாஸ்கர், கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். கிருஷ்ணகுமார் ஆகியோரும் பங்கேற்று புற்றுநோயை வென்று சாம்பியன்களாக வலம் வருபவர்களை பாராட்டி பேசினார்.