மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் திரு.பிரவீன்குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் இன்று (25.07.2023) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் வேண்டி 5 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 3 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 4 மனுக்களும், சாலை வசதி வேண்டி 2 மனுக்களும், பாதாளச்சாக்கடை இணைப்பு வேண்டி 4 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கை வேண்டி 1 மனுவும் என மொத்தம் 20 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாண்புமிகு மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.
தொடர்ந்து மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளான வார்டு எண்.4 நட்சத்திர நகர் 4வது தெரு, முத்தமிழ் நகர் 3 மற்றும் 4வது தெருக்கள் மற்றும் வார்டு எண்.13 கங்கை தெரு, ராமகிருஷ்ணா நகர், உச்சபரம்பு மேடு ஆகிய பகுதிகளில் சீரமைக்கப்பட்ட மற்றும் புதிய சாலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு மேற்கொண்டு வருங்காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப் படும் சாலைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இம்முகாமில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத்தலைவர் திருமதி.வாசுகி, துணை ஆணையாளர் திரு.தயாநிதி, உதவி ஆணையாளர் திரு.காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) திருமதி.மாலதி, நிர்வாக அலுவலர் திரு.ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் திரு.முருகேசபாண்டியன், உதவிப் பொறியாளர்கள் திரு.மணியன், திரு.ஆரோக்கியசேவியர், திரு.சோலைமலை, உதவி வருவாய் அலுவலர் திரு,ராஜாராம், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.அலாவுதீன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.