கல்வி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைகிறது. இதனால் கல்வி முறையில் மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து, தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் மாற்றத்திற்கும் புதுமைக்குமான ஒரு பயணத்தை இந்திய அரசு தொடங்கியது. தனிநபரின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் 'விளையாட்டுக்களை', கற்பித்தல் கருவியாக அங்கீகரித்திருப்பது அதன் மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும். தேசிய கல்விக் கொள்கையின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, விளையாட்டு மைதானச் செயல்பாடுகள் நன்கு கட்டமைக்கப்பட்டு, குறிப்பிட்ட கற்றல் விளைவுகளை அடைய வடிவமைக்கப்படும்போது, அவை வாழ்க்கையின் அத்தியாவசியத் திறன்களை வளர்ப்பதற்கான சிறந்த தளமாக மாறும்.
இதன் அடிப்படையில் இஎல்எம்எஸ் விளையாட்டு அறக்கட்டளையின் முன்முயற்சியான ‘சலாங் திட்டம்’, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், அனுபவக் கற்றல், பாடமுறை நெகிழ்வுத்தன்மை, உடற்கல்விக்கு சமமான முக்கியத்துவம் போன்ற சீர்திருத்தங்களின் மூலம் விளையாட்டுக் கல்வித் துறையில் அடிப்படையான தாக்கத்தை உருவாக்குகிறது. தனித்துவமான இந்த முயற்சியைத் தொடர, அரசு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற, தேசிய கல்விக் கொள்கை நிச்சயமாகக் கொள்கை அளவில் முன்முயற்சியை மேற்கொள்ளும்.
தேசிய கல்விக் கொள்கை 2020 மனப்பாடம் செய்வதிலிருந்து மாறி கருத்தியல் புரிதல், நடைமுறைப் பயன்பாடு மற்றும் விமர்சன சிந்தனைக்குச் செல்வதை ஊக்குவிக்கிறது. எனவே, கல்வியாளர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கூட தங்கள் கல்விப் பயணத்தில் விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் மனோபாவத்திற்கு மாறும் வகையில் இது நிச்சயமாக சரியான திசையில் ஒரு முன்னெடுப்பாகும். மேலும், அனைத்து வயதினரும் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உடற்கல்வி பெறுவதை உறுதிசெய்ய அறிவியல், மனிதகுல வரலாறு, கணிதம் போன்ற பாரம்பரிய பாடங்களுடன் உடற்கல்வியும் சேர்க்கப்படுவதை தேசிய கல்விக் கொள்கை 2020 கட்டாயமாக்கியுள்ளது.
கல்விக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தனது பாடத்திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒருங்கிணைப்பதும் சலாங் திட்டத்தின் இலக்காகும். தற்போது, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜார்கண்ட் கல்வித் திட்டக் கவுன்சிலுடன் இணைந்து, தீக்ஷா தளத்தின் மூலம், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சித் தேவைகள் குறித்து பகுப்பாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு, தங்களின் பாடத்திட்டம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்து, கல்வி முறையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க, அரசு அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான முன்முயற்சியின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், இதனை வெற்றிகரமாக அமலாக்க, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு, தரமான ஆசிரியர்கள் கிடைப்பது, பாடத்திட்ட சீரமைப்பு, மதிப்பீட்டு முறைகள், மாறிவரும் மனநிலை மற்றும் சமூக உணர்வுகள், அனைவரையும் உட்படுத்துவது மற்றும் பாலின சமத்துவம், குறைவான உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் போன்ற பல சவால்களுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் இதுபோன்ற பல கூட்டு முயற்சிகள் மூலமாக மட்டுமே, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விளையாட்டுடன் இணைந்த கற்றலின் கண்ணோட்டம் நிறைவேற முடியும்.