தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்கிடக் கோரி திங்கள் கிழமையன்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் அவைத்தலைவர் டாக்டர் விஜயராகவன், செயலாளர் டாக்டர் ரமேஷ், பொருளாளர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார், பேராசிரியர் டாக்டர் கல்யாண சுந்தரம், செயலாளர் (DMS) டாக்டர் நடராஜன், செயலாளர் (DPH) டாக்டர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுவரை அதனை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இதே போல் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.