முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் சிறைவாசிகளின் உடல் நலத்தை பேணி காப்பதற்காக 100 சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மதுரையில் இன்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் மதுரை மத்திய சிறை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவர் மாரீஸ்வரன் அவர்கள் தலைமையில் ஆறு சிறப்பு மருத்துவர்கள் உள்பட 17 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் உள்ள சிறைவாசிகளின் உடல் நலத்தை பரிசோதித்து மருத்துவ சிகிச்சை அளித்தனர். இவ்விழாவில் மதுரை சரக சிறை துறை தலைவர் திரு பழனி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இச்சிறப்பு மருத்துவ முகாமில் கண் மற்றும் பொது மருத்துவம், இருதயம் , எலும்பு மற்றும் மூட்டு சிறப்பு மருத்துவம், காது ,மூக்கு, தொண்டை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறைவாசிகளை பரிசோதனை செய்தனர்.
இன்று நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மதுரை மத்திய சிறையில் 323 சிறைவாசிகளும் பெண்கள் தனிச்சிறையில் 36 பெண் சிறைவாசிகளும் ஆக மொத்தம் 359 சிறைவாசிகள் பயன் பெற்றனர்.
இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாதந்தோறும் நடைபெறும் என்று சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் அடுத்த ஜூன் மாதம் வரையிலான கலைஞர் நூற்றாண்டு ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் சேர்த்து மொத்தம் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.