ஆகஸ்ட் 12 முதல் 24 வரை நார்வேக்கு பயணம் செய்ய மத்திய அமைச்சர் ரூபாலா தலைமையிலான உயர்மட்டக் குழு

Madurai Minutes
0

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையிலான உயர்மட்டக் குழு,  மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுடன், ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை நார்வேக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்தக் குழுவில் இணைச் செயலாளர் (கடல் மீன்வளம்) மற்றும் மீன் வளத்துறையைச் சேர்ந்த மற்ற உயர் அதிகாரிகளும் அடங்குவர்.


மார்ச், 2010 இல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு துறையில் இந்தியா மற்றும் நார்வே இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.


2023 ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நார்வேயின் ட்ரொன்ட்ஹெய்மில் நடைபெறும் அக்வா நார் 2023 கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சியில் இந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள், இது மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மிகப்பெரிய வர்த்தக நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்தக் கண்காட்சியானது, நீடித்த மற்றும் லாபகரமான மீன்வளர்ப்புக்கான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் தீர்வுகளை வெளிப்படுத்தும். மீன் ஆரோக்கியம், தீவனம், மரபியல், உபகரணங்கள், செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பின் பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு நார்வே நிறுவனங்களுடன் பிரதிநிதிகள் குழு தொடர்பு கொள்ளும்.


மீன்பிடி கப்பல்கள், மீன்பிடி துறைமுகங்கள், குஞ்சு பொரிப்பகங்கள், கூண்டு பண்ணைகள் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் அலகுகள் போன்ற மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு தொடர்பான நார்வேயில் உள்ள நவீன வசதிகள் சிலவற்றையும் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள். பிரதிநிதிகள் குழு நார்வே அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதோடு, இந்த பகுதிகளில் ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டின் சாத்தியக்கூறுகளை ஆராயும்.


நார்வேயில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் இக்குழுவினர் கலந்துரையாடி, மீன்பிடித் துறையில் இந்திய அரசின் முன்முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெறுவார்கள்.


இந்தப் பயணம், மீன்பிடித் துறையில் இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்தில் கூட்டாண்மை மூலம் கணிசமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !