அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மதுரை வளாகத்தில் 5 செப்டம்பர் 2023 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இயக்குநர் பேராசிரியர் முனைவர் ம.புஷ்ப ராணி, பல்கலைக்கழக ஆசிரியைகளுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்வியியல் உதவிப் போரசிரியர் டாக்டர் பா.பெ. பியூலாபெல் பென்சி வரவேற்றார்.
பேராசிரியர் முனைவர் ம.புஷ்ப ராணி, தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், மாணவர்கள் வாழ்வில் இருந்து அறியாமை இருளை அகற்றுவதற்காக, மாணவர்களின் எதிர்கால வாழ்வை மெருகூட்ட, தொடர்ந்து எரியும் மெழுகுவர்த்திகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்று கூறினார். மாணவர்களை அறிவாற்றலுடன் கூடிய நல்ல மனிதர்களாக உருவாக்கி, செதுக்கும் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர்களே என எடுத்துரைத்தார்.
ஆசிரியர்களைக் கொண்டாடும் வகையில் பேச்சு, கவிதை குறும்படங்கள், பாடல், நாடனம் என பல நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினர். ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி இந்த நாளை மறக்க முடியாததாக தினமாக மாற்றினர். முனைவர் எஸ். கீதாஞ்சலி, உதவி பேராசிரியர் வீட் அறிவியல் துறை நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.