மதுரையில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 229 பேருக்கு இன்று பணி ஆணைகளை வழங்கினார் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவீன்.
இதில் இளம் தலைமுறையினருக்கு பிரதமர் அலுவலகத்தின் கீழ் உள்ள மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், இளநிலை எழுத்தர்கள், ஸ்டெனோ, தனி உதவியாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் என 38 துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும். ரோஸ்கர் மேளா, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒரு ஊக்கியாக செயல்படும் மற்றும் இளைஞர்களுக்கு தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
ரோஸ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் இன்று நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர் கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் பணியில் சேரும் சிறப்பான வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மதுரை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெற்ற ரோஜ்கர் மேளாவில் தபால் துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஜிஎஸ்டி துறைகளைச் சார்ந்த 229 பேருக்கு மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் இன்று பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.