மதுரை,
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தக தளமான மீஷோ, ஜீரோ கமிஷன் மற்றும் ஜீரோ அபராதம் என்னும் திட்டத்தை அறிவித்ததன் காரணமாக தற்போது தமிழகத்தில் உள்ள ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதன் ஆன்லைன் இணையதளத்தில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. பண்டிகை காலத்தில் தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் பல்வேறு வகையான பொருட்களை மீஷோ ஆன்லைனில் வாங்கி உள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 72 சதவீதம் அதிகம் ஆகும். இதில் ஆடைகள், வீடு மற்றும் சமையலறைக்கு தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள், தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் மற்றும் வீட்டு அலங்காரப்பொருட்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
இது குறித்து மீஷோ நிறுவனத்தின் வினியோக வளர்ச்சிப்பிரிவின் தலைமை அனுபவ அதிகாரி லட்சுமி நாராயண் சுவாமிநாதன் கூறுகையில், மீஷோவின் ஜீரோ கமிஷன், ஜீரோ அபராத திட்டத்தின் காரணமாக ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எங்கள் ஆன்லைனில் இணைந்துள்ளன. இதன் காரணமாக எங்களின் விற்பனையானது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 3 மடங்கு அதிகரித்து இருப்பதை எங்களால் காண முடிகிறது. பண்டிகைக்காலத்தில், தமிழகத்தை சேர்ந்த விற்பனையாளர்கள் 18 கோடி ரூபாய் அளவிலான கமிஷன்களை சேமித்துள்ளனர், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை அனைவரிடமும் கொண்டு செல்லும் நோக்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார். மீஷோவில் பொருட்களை விற்பனை செய்யும் மதுரையை சேர்ந்த விற்பனையாளர் பூங்கோதை ராஜன் கூறுகையில், உள்ளூர் சந்தையில் இருந்து மொத்தமாக புடவைகளை எடுத்து ஆன்லைன் இணையதளம் மூலம் சில்லறை விற்பனை செய்து சிறிய அளவில் வியாபாரத்தை தொடங்கினேன். மீஷோவின் ஜீரோ கமிஷன் திட்டம் என்னுடைய அதிவேக வளர்ச்சியை உறுதி செய்த அதே வேளையில் சரியான விலையில் புடவைகளை விற்பனை செய்யவும் எனக்கு உதவியது. இந்த நிலையில் தற்போது எனக்கு மாதத்திற்கு 2 லட்சம் ஆர்டர்கள் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.