மதுரை மாவட்டம்
பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்களுக்குத் தலா ரூ.10000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ்வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் 2022 – 2023-ஆம் ஆண்டிற்கு மதுரை மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவியர் இருப்பின் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் / கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் தங்களது விண்ணப்பத்தினை தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், உலகத் தமிழ்ச் சங்க வளாகம், அரசு சட்டக்கல்லூரி அருகில், மதுரை-625 020 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
இப்போட்டிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி.எண். 0452-2530711-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.