ஆண்டிபட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது . 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . இந்து சமய ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது ஐதீகம் . அதன் அடிப்படையில் 18 ஆண்டுகள் ஆன காரணத்தால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோவில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று காலை விமான கலசத்திற்கு மகாபிசேகம் நடைபெற்றது . முன்னதாக மூன்று நாட்களும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத பூர்ணாகதி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி விமான கலசத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மேல் மின்மோட்டோர் பைப்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது . அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர் . தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் ,பழம், தயிர் ,சந்தனம் ,இளநீர்,குங்குமம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது . தொடர்ந்து பக்தர்களுக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது . பரம்பரை அறங்காவலர் காந்திமதி நாதன் மற்றும் பூசாரி கணேசன் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் . .காவல்துறையினர் டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.