இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்த புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா இன்று பகலில் நடைபெற்றது.
காந்தி மியூசியம் செயலாளர் திரு.நந்தாராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினார்.
மாணவர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் மதுரையை மையமாகக் கொண்டு பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றை எல்லாம் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நந்தாராவ் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் சுந்தராச்சாரி முன்னிலை வகித்தார்.
காந்தி மியூசியம் காப்பாட்சியர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் மதுரை மத்திய மக்கள் தொடர்பக உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர்கள் வீரமணி மற்றும் வேல்முருகன் செய்து இருந்தனர்.
கல்லூரிகளுக்கு இடையிலான பேச்சு போட்டி ரங்கு வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி டீன் ஜி.மணிகண்டன், யாதவர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ஆ.த.பரந்தாமன் மற்றும் கோவில்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஆர்.சேதுராமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.