ஆண்டிபட்டி ,பிப். 25 -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர்.விவசாயிகள் பெரும்பாலும் பூச்சி மருந்து வாங்குவதில் அதிக செலவு ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். அந்த செலவீனத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து மரிக்குண்டு கிராமத்தில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறியின் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளுக்கு செய்முறை விளக்கத்தினை மாணவி லோகிதா விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார் . இந்த செய்முறை விளக்கத்தின் போது விவசாயி செந்தூரம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொறிகளை பருத்தி, உளுந்து, பச்சைப்பயறு, பச்சை மிளகாய் போன்ற பல வகையான பயிர்களில் பயன்படுத்தலாம். வெள்ளை ஈக்கள், இலைப்பேன்கள், அஸ்வினி, இலைத்துளைப்பான் முதலிய சாறு உறிஞ்சும் பூச்சிகளை ஈரக்கவும், பிடிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் இப்பொறிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டினை கட்டுபடுத்த முடியும். ஒரு ஏக்கர்ருக்கு ஐந்து பொறி என்ற கணக்கிலும் ஒரு ஹெக்டேருக்கு பன்னிரண்டு என்ற கணக்கிலும் பயன்படுத்தலாம் என்று மாணவி தெரிவித்தார்.