திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.
பூலாங்குறிச்சியில் அனைத்து சமுதாயத்தாரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் வ.செ.சிவலிங்கம் செட்டியார் உதவியுடன் 1972 ஆம் ஆண்டு அரசு கலைக்கல்லூரி துவங்கபட்டது. அரசாங்கம் அவரது பெயரையே கல்லூரிக்குச் சூட்டியது. வருடந்தோறும் கல்லூரி நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்துறை சார்பில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா, கல்லூரி பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் ப.முத்துச்சாமி தலைமை வகித்தார். தொழிலதிபரும் கல்லூரி நிறுவனரின் மகனுமாகிய அபிராமிராமநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு படிப்பின் அவசியத்தையும் உழைப்பின் உயர்வையும் எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நல்லம்மைராமநாதன் பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவ, மாணவியரை நல்லொழுக்கத்துடன் நடத்தி வரும் பேராசிரியர்களும் பாராட்டுப் பெற்றனர். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் ப.ஆனந்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் வேதியியல்துறைத் தலைவர் ப.ரமாதேவி நன்றி கூறினார்.