அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஒருவர் சாவு 50 பேர் காயம்
படவிளக்கம் - (டி.பி.ஆர்.எம்.ஏ.என்) சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளைகள்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஆயிரம் காளைகள் பங்கேற்பு. வேடிக்கைப் பார்த்த ஒருவர் கீழே விழுந்து சாவு. 50 க்கும் மேற்பட்டோர் காயம்.
சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் அமைந்துள்ள சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட பாலதண்டாயுதபாணி சாமி கோயிலில் மாசிமகத் திருவிழாவையொட்டி ஐந்து நிலை நாட்டார்களால் இம்மஞ்சுவிரட்டு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த மஞ்சுவிரட்டை முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், வேலமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டார்கள் மதியம் 1 மணிக்கு கோயிலில் அபிஷேகம் நடத்தி வேட்டி துண்டுகளுடன் ஊர்வலமாக வந்து தொழுவில் கட்டப்பட்டிருந்த 62 மாடுகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு 1.30 க்கும் மேல் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டது. 60 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டிருந்தனர். முன்னதாக வயல்வெளிப்பகுதிகளிலும் பனைமரக்காட்டுப் பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் மாடுகள் முட்டியதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேடிக்கை பார்த்த மதுரை மாவட்டம் அயினிப்பட்டியைச் சேர்ந்த மூக்கன்(60) தவறி விழுந்ததில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபீஷாபானு தலைமையில் 60 பேர் முதலுதவி சிகிச்சையில் ஈடுபட்டிருந்தனர்.கால்நடை மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மருத்துவக்குழுவினர் மாடுகளுக்கான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.