மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டு எண்.8, கண்ணனேந்தல் அருகே உள்ள செந்தில் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் நேற்று(19.06.2023) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், 100 KVA திறன் கொண்ட புதிய மின்மாற்றி மற்றும் மாநகராட்சி வார்டு எண்.13, ஆத்திக்குளம் அருகே உள்ள கனகவேல் நகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக புதிய மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கண்ணனேந்தல் அருகே உள்ள செந்தில் நகர் பகுதியில் இன்றைய தினம் புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன் பெறுவார்கள். மேலும், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் வசதிக்காக கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை மாநகராட்சி வார்டுஎண். 13, ஆத்திக்குளம் கனகவேல் நகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாநகராட்சி ஆத்திக்குளம் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் திருமதி.ஜெ.மலர்விழி அவர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர் திருமதி.வாசுகி சசிகுமார் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.