மதுரை மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் நோக்கத்துடன் தோட்டக்கலை துறை மூலம் 2023-24ஆம் நிதியாண்டிற்கு ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் மானியம் வழங்கப்பட உள்ளது.
மல்லிகை உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், மல்லிகை மலர்களின் தரத்தை மேம்படுத்தவும் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கவும் மல்லிகை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக பருவமில்லா காலங்களில் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், பழைய மல்லிகை தோட்டங்களை புதுப்பிக்கவும், மலர்களை விரைவில் வணிகத்திற்கு எடுத்துச்செல்லவும் ஊக்குவிக்கப்பட உள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம் இனத்தில் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வீதம் ஒரு எக்டருக்கு 40% மானியத்தில் ரூ.16000/- வழங்கப்பட உள்ளது. மல்லிகை பழைய தோட்டங்களை புதுப்பிப்பதற்கு அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வீதம் ஒரு எக்டருக்கு 50% மானியமாக ரூ.20000/- வழங்கப்பட உள்ளது.
அறுவடை செய்த பூக்களை தரம் குறையாமல் விற்பனை செய்வதற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 எண்கள் வீதம் 40% மானியத்தில் குளிர்ப்பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 40% மானியத்தில் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 10 எண்கள் வீதம் நெகிழி கூடைகள் வழங்கப்பட உள்ளது.
மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கண்ட இனங்களில் பயன்பெறுவதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/ Portal-இல் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.