மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதி எக்ஸ்பிரஸ் வாகனம் பாட்டரியில் இயங்கும் 3 சக்கரங்கள் கொண்ட 500 கிலோ வரை பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 முதல் 80 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாகும்.
மதி எக்ஸ்பிரஸ் மூலம் வணிகம் செய்ய ஆர்வமும், தகுதியும் உடைய மகளிர் சுயஉதவிக் குழுவை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர் மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுயஉதவிக்குழுவானது துவங்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தி செய்ததாகவும், தேசிய ஊரக வாழ்வாதார இணையத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
தகுதியுடையவர்கள் மதுரை புதுநத்தம் சாலை ரிசர்வ் லயன் பஸ் நிறுத்தம் அருகில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற 28.06.2023-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.