முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (24.06.2023) பொது சுகாதாரத்துறை சார்பாக மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் மதுரை, செட்டிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி, சக்கிமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார்கள்.
தெடர்ந்து மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தமிழ்நாடு மாறிலம் முழுவதும் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் 2 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்களும், மதுரை ஊரகப் பகுதியில் 4 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள் என மொத்தம் 6 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள், துாய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மக்கள் எளிதாக அணுகும் வகையிலும் மாநகராட்சி பகுதியில் பொன்னகரம், வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கே.கே.நகர், அருள்மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஊரக பகுதியில் மதுரை கிழக்கு வட்டாரம் சக்கிமங்கலம் மீனாட்சி நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரை மேற்கு வட்டாரம் ஊமச்சிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, அலங்காநல்லுார் வட்டாரம் வெள்ளயம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, வாடிப்பட்டி வட்டாரம் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இம்முகாம்களில் தாய்சேய் நலம், தொற்றாநோய், நோய்களுக்கான பரிசோதனையான இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, மற்றும் இசிஜி பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. பரிசோதனையின் போது மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது.
பத்திரப் பதிவு அலுவலக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் திட்டம் 6 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்பட உள்ளது, தற்போது எதிர்கொள்ளப்படும் சிறு சிறு காலதாமதங்கள் கூட இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்படும். போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ஆய்வு செய்து ரத்து செய்யும் சட்டத்தின் கீழ் இதுவரை ஏறத்தாழ 16 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்று 2,500க்கும் மேற்பட்ட போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.சூரியகலா கலாநிதி அவர்கள், மாநகராட்சி மண்டலத் தலைவர் திருமதி.வாசுகி சசிக்குமார் அவர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.குமரகுருபரன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.