மதுரை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நேற்று (18.07.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மத்திய அரசின் மூலம் முப்படை ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் SPARSH டிஜிட்டல் தளம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
மத்திய அரசு கடற்படை, விமானப்படை, ராணுவம் ஆகிய முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன் வழங்குதல், ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை சிரமமின்றி தெரிவித்திடவும், ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள், ஓய்வூதிய அனுமதி பெறுதல், உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இணைய வழியில் பதிவு செய்திட SPARSH என்ற டிஜிட்டல் தளம் (WEB PORTAL) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் தளம் குறித்து முப்படை ஓய்வூதியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டம் 18.07.2023 முதல் 19.07.2023 ஆகிய இரண்டு தினங்கள் நடத்தப்படுகின்றது. தேசத்திற்காக அயராது உழைத்த ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் அவர்களது உரிமை. "சரியான நேரத்தில் சரியான ஓய்வூதியம்” என்பது SPARSH டிஜிட்டல் தளத்தின் நோக்கமாகும். இணைய வழியில் தெரிவிக்கப்படும் புகார்கள், கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிகழ் நேரத்தில் தெரிந்து கொள்ளவும் இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தொடர்பாக முப்படை ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 900-ற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், சென்னை, ரெகார்ட் ஆபீஸ், வங்கிகள் ஆகிய counter-களை நிறுவி வருடாந்திர அடையாளம் காணுதல், ஆதார் புதுப்பித்தல், SPARSH விளக்கம் மற்றும் குறை தீர்ப்பு என பல்வேறு குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன.
மதுரையில் நடைபெறும் இந்த SPARSH குறை தீர்ப்பு முகாம் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் மூலம் நடைபெறும் 75-வது முகாம் ஆகும். மேலும், இந்த முகாம் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாளம் காணும் பொருட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 19.07.2023-அன்றும் தொடர்ந்து நடைபெறும். ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.