மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சீரமைப்பு பணிகள், போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்கான பணிகள், மெட்ரோ இரயில் பணிமனை அமையவுள்ள இடம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு. அ. சித்திக், திட்ட இயக்குனர் தி. அர்ச்சுனன் ஆகியோர் மதுரை மாநகரில் நேரடி கள ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்ததாவது:-
திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, மீனாட்சி அம்மன் கோவில், புதூர், மாட்டுத்தாவணி மற்றும் மெட்ரோ இரயில் பணிபனை அமையவுள்ள தோப்பூர் ஆகிய இடங்களில் சீரமைப்பு பணிகள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தொல்பொருள் ஆய்வு தளத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எவ்வளவு தூரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ இரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த திருக்கோவில்களின் சுற்றுச்சுவரிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மதுரை மெட்ரோ இரயில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரிலிருந்து 115 மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. அதேப்போல் திருப்பரங்குன்றத்தில் 160 மீட்டர் தொலைவில் மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த திருகோவில்களின் அருகில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறும் போது பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பணிகள் மேற்க்கொள்ளப்படும்.
இந்த ஆய்வின் போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ரேகா பிராகாஷ், மதுரை மீனாட்சி அம்மன் திருகோவில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கலைச்செல்வன், விக்னேஷ் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.