மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகள் அவர்கள் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறைக்குள் உள்ள பொழுதே அளிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன் என்ற பெயரில் துவங்கி சிறைவாசிகளுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது.
முதற்கட்டமாக இத்திட்டத்தில் புழல் , வேலூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய ஐந்து இடங்களில் துவங்கப்பட்டு அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக தமிழக முழுவதும் உள்ள ஆறு முக்கிய இடங்களில் புதிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் துவங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இப்பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இன்று மதுரை மத்திய சிறையில் உள்ள தகுதியான 41 தண்டனை சிறைவாசிகளுக்கு களப்பயிற்சியும் பெட்ரோல் நிலையத்தில் பணி புரிவது குறித்தான பயிற்சி அளிக்கும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் திரு பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு பரசுராமன் அவர்கள் முன்னிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை பிரிவு முதுநிலை மேலாளர் திரு கோபாலகிருஷ்ணன் (ஓய்வு) மதுரை பிரிவு தலைமையாக அதிகாரி மகேஷ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்தனர். இத்திட்டத்தின் மூலம் சிறைவாசிகளுக்கு ஒரு நல்ல வேலைவாய்ப்புள்ள தொழில் பயிற்சியும் வருமானமும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.