மதுரை மாநகராட்சி எம்.ஜி.ஆர்.பேருந்து நிலைய நுழைவுவாயில் மற்றும் உட்பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 30 தரைக்கடைகள் மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) திருமதி.மாலதி அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பணியாளர்களை கொண்டு நேற்று (23.11.2023) அகற்றப்பட்டது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வைகை ஆற்றுக் கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் நகரமைப்பு பிரிவின் அலுவலர்களால் குழு அமைக்கப்பட்டு தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் நுழைவுவாயில் மற்றும் பேருந்து நிலைய உட்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 தரைக்கடைகள் (பூக்கடைகள், பழக்கடைகள்) மாநகராட்சியின் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. மதுரை மாநகராட்சியின் அனுமதி பெற்ற 189 கடைகள் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கடை முன் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் உள்ளிட்ட இதர பொருட்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் இதுபோன்று பேருந்து நிலைய நுழைவு வாயில் மற்றும் உட்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வில் உதவி ஆணையாளர் (வருவாய்) திரு.மாரியப்பன், உதவி ஆணையாளர் திருமதி.வரலெட்சுமி, செயற்பொறியாளர் (திட்டம்) திருமதி.மாலதி, உதவிப் பொறியாளர் திருமதி.பொன்மணி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.