மதுரை மத்திய சிறையில் அமைந்துள்ள சிறை சந்தையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களான ரெடிமேட் ஆடைகள் வேஷ்டி சட்டைகள் கைலிகள் தீபாவளி சிறப்பு இனிப்பு கார வகைகள் செக்கில் தயார் செய்யப்பட்ட நல்லெண்ணெய் கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் சிறப்பு விற்பனையை இன்று சிறைத்துறை டிஐஜி திரு பழனி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜி திரு .பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறைத்துறை டிஐஜி திரு பழனி அவர்கள் கூறியதாவது, தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சிறைவாசிகள் சீர்திருத்த பணியில் தமிழ்நாடு அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு தவறு செய்து சிறைக்கு சென்று வந்தபின் அவர்கள் தான் செய்த தவறை உணர்ந்து மீண்டும் தவறுகள் புரியா வண்ணம் அவர்களுக்கு நல்லொழுக்கங்களும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான தொழில் பயிற்சிகளும் ,கல்வி அறிவும் பெற பல்வேறு வகையான திட்டங்களை எங்களது சிறை துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறைவாசிகளின் குடும்பத்தாரும் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரும் பயன்பெறும் வகையில் இந்த தீபாவளியில் பொதுமக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் ஆன தீபாவளி ஆடைகள் மற்றும் தீபாவளி இனிப்பு கார வகைகள் விற்பனையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி பொதுமக்கள் சிறைவாசிகளின் தயாரிப்பு பொருட்களை அதிகளவு வாங்குவதற்கான ஒரு சிறப்பு ஏற்பாட்டினை அவர் மேற்கொண்டுள்ளார்.
அனைத்து மக்களும் வாங்கும் வகையில் இனிப்பு வகைகள் கிலோ 300 ரூபாய்க்கும் கார வகைகள் கிலோ 240 ரூபாய்க்கும்* வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் புரிபவர்கள் தங்கள் ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்குவதற்கு வசதியாக ஒன்பது வகையான கார மற்றும் இனிப்பு வகைகள் அடங்கிய ஒரு இனிப்பு பெட்டகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் விலை ரூபாய் 499 மட்டுமே. இவை அனைத்தும் ஒரு கண்டெய்னர் பாக்சில் முறையாக அடைக்கப்பட்டு எளிதாக அன்பளிப்பு வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி பண்டிகையில் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிறைவாசிகள் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றும் வகையிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்களுடன் சமுதாயத்தில் சிறைவாசிகள் இணைவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தீபாவளி சிறப்பு விற்பனை அமையும்.
இந்த தீபாவளி ஒரு சீர்திருத்த தீபாவளி ஆக அமையும் வகையில் பொதுமக்கள் தங்களது ஆதரவை தரும்படி கேட்டுக் கொள்வதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் திரு. செல்வராஜ் தனது ஊழியர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 100 கிலோ சிறப்பு இனிப்பு பெட்டகத்திற்கான ஆர்டரை வழங்கி முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
ராயல் அசோசியேஷன் மற்றும் ரோட்டரி பிரசிடெண்ட் சிவசங்கர் அவர்களும் தங்கள் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளனர். டிவிஎஸ் ரப்பர் ஃபேக்டரி கோச்சடை குழும நிர்வாகிகள் சிறைவாசிகளின் சீர்திருத்தப் பணியில் தங்களது பங்களிப்பும் இருக்கும் என்று தெரிவித்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.