மலேரியா நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் அந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு உலகம் முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினம் கொண்டாடப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவும் முதன்மையான நோய் எனவும் கொசுக்கடி மூலம் ஒருவர் உடலில் இருந்து மற்றவருக்கு கடத்தப்படுகிறது எனவும், பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை பாதித்த ஒரு நோய் மலேரியா எனவும் கூறி, இக்கூட்டத்தில் மலேரியா பற்றிய தெரிவிக்கப்படும் கருத்துக்களை மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலையம் நிலையத்தில் பணிபுரியும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி கூறுகையில் உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் உலக மலேரியா தினத்தை கடந்த 2007-ல் அனுசரித்தது எனவும் ஒவ்வொரு ஆண்டும், உலக மலேரியா தினத்தைக் கடைப்பிடிக்க ஒரு புதிய கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது எனவும், அந்த வகையில் இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 'அதிக சமத்துவமான உலகத்திற்காக மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை விரைவுபடுத்துங்கள்' என்ற கருப்பொருளின் கீழ் உலக மலேரியா தினத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது எனவும் கூறினார்.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சார்ந்த மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் வரதராஜன் ஆகியோரும் உரையாற்றினர். பின்னர் மாணவ மாணவிகள் எழுப்பிய மலேரியா சம்பந்தமான வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்ட ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் எஸ் கார்த்திகா தலைமையில் பேராசிரியர்கள் ராமநாதன், சீனிவாசன், சகாய ஆக்சின் பிரவீனா, நந்தினி, சசிகலா, மேகலா, ஆர்த்தி, கவிதா ஆகியோர் செய்தனர். மாணவர்கள் தவ்பீக் அஹமத், லிகாஸ், மாயன் தமிழரசன், அருண்குமார், சின்ன கருப்பசாமி, சசிதரன் மாணவிகள் வின்சிதேவி, மணிமேகலை ஆகியோர் வினாக்கள் எழுப்பி விளக்கம் பெற்றனர். இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் முனியாண்டி நன்றி கூறினார்.