மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.32 அவுட் போஸ்ட் பாரதியார் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், ஆணையாளர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேற்று (01.02.2024) பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு சுகாதாரப்பணிகள் தூய்மைப் பணியாளர்களை கொண்டு நாள்தோறும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலையோரம் தேங்கியுள்ள மணல்களை அகற்றுதல், வீடு வீடாக மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை சேகரித்தல், நுண்ணுயிர் உரக்கூடங்களில் குப்பைகளை தரம் பிரத்து உரமாக்குதல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு களப்பணிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திட மாநகராட்சியின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மண்டலம் 2 வார்டு எண்.32 அவுட் போஸ்ட் பாரதியார் பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை மாண்புமிகு மேயர், ஆணையாளர் ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இடங்களில் புதிய கழிப்பறைகள் கட்டப்படுவதால் தூய்மை பணியாளர்கள் இடர்பாடுகளின்றி சிறப்பாக பணியாற்ற முடியும்.
இந்நிகழ்வில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத் தலைவர் திருமதி.சரவண புவனேஸ்வரி, தலைமை பொறியாளர் திரு.ரூபன்சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் திரு.அரசு, உதவி ஆணையாளர் திருமதி.அருணாச்சலம், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.பூபதி. உதவி செயற்பொறியாளர் திரு.காமராஜ், சுகாதார அலுவலர் திரு.சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் திருமதி.விஜயமௌசுமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.